தாத்தா-பெயரன்

முதியவர்களே பொதுவில் அழகு தான்! சில சமயங்களில் முதியவர்கள் பேரழகாக காட்சித் தருகிறார்கள்....ஆமாங்க....



இன்று காலை வேளையில், முதியவர் ஒருவர், ஒரு தோளில் தன் பிஞ்சு பெயரனையும், இன்னொரு தோளில் நூற்பையையும் சுமந்து கொண்டே, சாலையைக் கடந்தார்... அவனது கையிலொரு மிட்டாயையும், அன்பு முத்தம் ஒன்றை உச்சம் நெற்றியிலும் இட்டுவிட்டு, "டாடா" சொல்லிக் கிளம்பினார்.., இனிதான் உச்சக்கட்டமே.... 

சிறுதூரம் கடந்த முதியவர், தன் பெயரன் அழுகிறானா? வகுப்புக்குள் சென்று விட்டானா? என்று பின்னோக்கி திரும்பி பார்த்துவிட்டு, ஒரு புன்னகையை உதிர்த்தார் பாருங்கள்... கொள்ளையழகு... தன் பெயரனின் மீதுள்ள அவரது பாசத்தின் ஆழத்தினை, ஆழ்ந்து நோக்கியதால் என்னால் உணரமுடிந்தது... 


இன்று கண்ட நிகழ்வு என்றாலும் , எங்க தாத்தா-வை அங்கு காணமுடிந்த ஒரு உணர்வு..... இவ்வுலகில் அவரில்லை என்கையில் வந்த மனவலி, பெருமூச்சுடன் தற்காலிகமாக களைந்தது, அலுவலகத்திற்கான பேருந்து வந்ததைக் கண்டு.... 

உறவுகளில் தாத்தா-பெயரன் உறவு, தாத்தாவின் முந்தைய மூன்று தலைமுறைகளையும் பெயரனின் மூன்று தலைமுறைகளையும் இணைக்கின்ற பாலம் போன்றது..... 


என் தாத்தாவின் நினைவுகளோடு நான்..... இல்லை இல்லை... 


என் நினைவுகளில் அவர் வாழ்கிறார் உயிராக ..... 

ரா.அ.நா.செ.அங்குராஜ்
12-02-2016

இசையை அருந்தும் சாதகப் பறவை

சுவையான சம்பவம் தான், இருந்தாலும் என் வாயால் இதை எப்படி உங்களிடம் சொல்வேன்...!? சொல்லாமலும் இருக்க இயலவில்லை.... சரி சொல்லிவிடுகிறேன் ... படித்துப் பார்த்துவிட்டு சிரிக்கலாம் (சிரிப்பு வந்தால்), ஆனால் கோபப்பட்டு, என்னை எங்கேனும் காண நேர்கையில், அடிக்காமல் இருக்கணும்... இதான் நம்ம 'டீலிங்கு'....

அலுவலகம் முடிந்து வீடு திரும்பும் போது கைப்பேசியில் பாடல்கள் கேட்டுக்கொண்டே வருவது வழக்கம் ... இன்றும் அப்படித்தான்.. ஆனால், தலையணி கேட்பொறி (ஹெட்செட்) கொண்டுவராததாலும், பேருந்தினுள் வீண் பேச்சுக்களாலும், வாகன இரைச்சல்களினாலும், வேறு வழியின்றி, சத்தமாக வெளியில் பாடல்களை ஒலிக்கச் செய்தேன்... நிறுத்தத்தைப் பேருந்து அடைந்ததும், அப்படியே இறங்கி, அங்கிருந்த மா.போ.பயணச்சீட்டு வழங்கும் மையத்தின் முன்னிருந்த வாடிக்கைப்பயணிகளின் வரிசையில் தஞ்சமடைந்தேன், சீட்டினை புதுப்பிக்க... என் கைப்பேசியில் அப்போது "ஒருநாளும் உனை மறவாத" பாடல் ஒலித்தவண்ணம் இருந்தது... மிகப்பிடித்தப் பாடல் வேறு...

மெய்மறந்து ரசித்திருந்த வேளையில், வரிசையில் என் முறை வந்தது.. உள்ளிருந்த அலுவலரிடம் பழைய மாத பயணச்சீட்டு அட்டையையும், நிரந்தர பயண அடையாள அட்டையையும் கொடுத்து, புதுப்பித்து, வரும் பின்தேதியிட்டு, புதுப்பயணச்சீட்டு தரக்கோரினேன்....

அவரோ "ஆயிரம் தந்தால் புதுச்சீட்டு" என்றார்... சிரித்துக்கொண்டே அவர் சொன்னதால், விளையாட்டுக்குத்தான், கேட்கிறாரோ என்று நான் எண்ணியதோடு மட்டுமில்லாமல்.... "இதோ பாருங்கள் நிரந்தர அடையாள அட்டை... ஆயிரம் கொடுத்து முன்னாடியே வாங்கியாச்சு.... இந்த மாசத்துக்கு மட்டும் புதுப்பித்துக் கொடுங்கள்" என்று அந்நியாயத்தை நான் நியாயப்படுத்த ....

பின்னர் அவர் "சார், இங்கப் பாருங்க... ரூ.1000 போட்டுருக்கா" என பழைய மாத அட்டையைக் காட்டி சொன்னதுடன் "இதே போல் ஆயிரம் தந்தால் புது அட்டை கிடைக்கும்" என்றும் சொல்லிமுடிக்கும் முன்பு தான், எனக்கு விளங்கியது, 'ஆயிரம் தரவேண்டும் என்பதை மறந்து இருந்தது'...

"அச்சச்சோ இப்படிலாமா அங்கு நீ வந்து மாட்டிக்கிடுவ" னு என்னிடமே நான் கேட்டுக்கொண்டே , அவர் கையிலிருந்த என் அட்டைகளை வாங்கிக்கொண்டு, "ஒரு நிமிடம்" என்று சொல்லி ஆயிரம் ரூபாயைக் கொடுத்தேன்... அவரும் புதுச்சீட்டைக் கொடுத்தார்... அவர் ஒன்று கேட்டார் பாருங்க, அங்க தான் நான் என்ன பண்ணிட்டு யோசிச்சுட்டு இருந்தேன்னு எனக்கே புரிஞ்சது...

(முன்பு சார் என்றவர்) "தம்பி, நீங்க கேட்ட பாட்டுங்க எல்லாமே ஜானகி அம்மா பாடுனதா இருக்கே... ரொம்ப நல்ல பாட்டுங்க தம்பி... இப்படி ஒரு பாடகி, இனி பொறந்து கூட வரமுடியாது .... அவுங்க நல்லா இருக்கணும்"னு சொல்லி முடித்தார் பாருங்க....

அம்மா பாடல்களை வெளி மறந்து கேட்டுக்கொண்டே இருந்ததால, நானும் பணம் கொடுக்கவேணும் என்பதையே அயத்து நின்று பேசியுமிருக்கிறேன்... ம்....

"இசையை அருந்தும் சாதகப் பறவை... போல நானும் வாழ்கிறேன்" னு ஜானகிம்மா பாட்டு பாடியிருக்காங்க... அதன்வழி நிற்க, அவுங்க புள்ளைங்கள்ல நானும் ஒருத்தன் னு, நடந்த நிகழ்வுதான் சாட்சியம் னு உணர்ந்து என் மெய்சிலிர்த்த தினம் ....




செ. அங்குராசன்

12-02-2016

அலுவலக ஆண்டுவிழா, ஒரு மாலை வேளை அது..

நான் வேலை செய்யும் தனியார்  அலுவலகத்தின் கடந்த ஆண்டு விழாவின் போது.....



ஒரு மாலை வேளை அது, சென்னை, ப.ம.சாலை, தனியார் கேளிக்கை அமைப்பிற்கு சொந்த மைதானத்தில்...... வழக்கம்போல், அழகான இளம்பெண்கள் (சண்டைக்கு வரக்கூடாது) வரவேற்க, மற்ற நண்பர்கள் அரட்டையும் கேளியுமாய் அங்குமிங்கும் தம் கால்களையும் கண்களையும் ஓட்டமிட, இன்னும் சிலரோ 'செல்பி' எனும் தங்களைத் தாமே படம்பிடித்து கொண்டு களித்து இருக்க ஆரம்பமானது, அலுவலக ஆண்டுவிழா.....
விழாவின் நெறியாளர் ஒரு நான்கு கேள்விகளை பொதுவாய் கேட்டு, அதன் பதில்களுக்கு ஒத்த நபர்களை, தேர்ந்தெடுத்து, குழுவிற்கு ஒரு முன்னிருத்தி ஆள் என செய்யலானார்.. அவ்வகையில் ஒரு வினா "எவரொருவர், உங்கள் அலுவலகத்தில் *சின்சியர் சிகாமணி*யாக, வேலை செய்வது?" என்று கேட்க... போதுமே நண்பர்களுக்கு சொல்லித்தரவா வேண்டும்... நண்பன் ராஜ்குமார் (என் ஊரைச் சேர்ந்தவன் வேறு, பாசத்தை வெளிப்படுத்தனும்னு முடிவு கண்டதுபோல்), உள்ளிருந்து "அங்கு", "அங்குராஜ்" எனக் கத்த, மற்றவர்களும் ஒன்றாய் "அங்கு", "அங்கு" எனக்கூவ, ஒட்டு மொத்த கூட்டத்தின் விழிகளும் என்மேல் விழுந்தது.....
எனக்கோ எங்கே நம்மை வைத்து காமெடி கீமெடி பண்ணிவிடுவார்களோ என்று நெஞ்சோரத்தில் ஒரு கிலி.. (உங்க மைன்டு வாய்ஸ் கேட்குது, புரியுது, ஒத்துக்குறேன், "நானே ஒரு காமெடி பீஸ்" னு)........
என் ஊர்க்கார நண்பன் குரலால் செய்ததை, இன்னும் இரு நண்பர்கள் செயலிலே காட்ட முற்பட்டார்கள்...... போன ஜென்மத்தில் இருந்து இந்த ஜென்மம் வரை, விடாது கருப்பினைப் போன்று, என்னுடன் நட்பு பாராட்டும் இரு நண்பர்களான கிருஷ்ணா, தனா......
ஆம், அனைவரும் கக்கபுக்க என்று சிரித்திருக்க, என் நாற்காலியிலிருந்து கிளப்பப்பட்டது, என் மெய்யுடல்.....
என்னை மாட்டிவிடுகின்ற மகிழ்ச்சிக் களிப்பில் இருக்கிற என் இரு உயிர் நண்பர்களைப் பாருங்கள்...
"பல்லு முழுக்க வாயா? இல்ல, வாயி முழுக்க பல்லா?!"னு கேக்குற அளவுக்கு, குஷியோ குஷி....
(என்ன ஒரு ஆனந்தம் அந்த கரடிக்கு!? என்பதைப் போல்)... ஹ ஹா ஹா...

நண்பர்களிடம் களித்து இருக்கும் வேளையில், யாரும் அறியா வண்ணம், எடுக்கப்பட்ட புகைப்படங்கள் காட்டும், நட்பின் இனிமைகளை.... அவ்வகையில், இந்த புகைப்படம் எனக்கு ஒரு சொத்து.....  😇😇😇