செய்யவிடுவாரா பிக்பாஸ்.?!

அண்ணன் ஒருவர் அவருக்குத் தெரிந்த ஆட்டோ ஓட்டுநர் தன் மகளை கல்லூரியில் சேர்க்கப்பட்டது தொடர்பாக ஒரு பதிவிட்டிருந்தார். அதில் சில கேள்விகளும் எழுப்பியிருந்தார்.

கேள்வி 1: வங்கிகள் கொடுக்கும் கல்விக்கடன் - மருத்துவம், பொறியியலுக்கு மட்டும் தானா? பி.காம் படிக்க கடன் கொடுக்க மாட்டாங்களா?

கேள்வி 2: பன்னிரண்டாம் வகுப்பில் 1144 மதிப்பெண் எடுத்த, ஒருவர் பி.காம் படிக்க எத்திராஜ், எஸ்.ஐ.டி போன்ற கல்லூரியை அணுகி, மனுச்செய்தும் இடம் கிடைக்கவில்லை. கூடவே அங்கெல்லாம் லட்ச ரூபாய் வரை செலவு ஆகும் என்று சொல்லி இருக்கிறார்கள். பி.காம் படிக்க அம்புட்டு ஆகிறதா?

கேள்வி 3. சுமார் பத்துக்கல்லூரிக்கும் மேலாகச் சென்று மனுச்செய்திருக்கிறார். ஒவ்வொரு இடத்தில் 250 தொடங்கி 500 வரை செலவு. சீட்டுதான் தரலையே மனுவுக்கு ஐம்பதோ, நூறோ செலவுக்கு எடுத்துகிட்டு, மீதம் பணமெல்லாம் கொடுக்க மாட்டாங்களா சார்ன்னு கேட்கிறார். இதை ஒழுங்கு செய்ய இயலதா? இறுதியில் மேற்கண்ட கல்லூரிகளில் இடம் கிடைக்காமல் சைதாப்பேட்டையில் உள்ள ஒரு கல்லூரியில் சேர்த்திருக்கிறார்.

=‍*=*=*=*=*==*=*=*=*=*=*=**=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*==**=*=*=*=*==*=*

உண்மையில் இது யதார்த்தத்தின் வழி வெளி வந்த‌ நியாயமான கேள்விகள். தொழிற்கல்வி படிப்புகளைப் போன்றே கலை மற்றும் அறிவிய‌ல் படிப்புகளுக்கும் சட்டப்படி, முறைப்படி கல்விக்கடன் கேட்டு விண்ணப்பிக்கப்பட்டிருந்தால் தரப்பட வேண்டும். ஆனால், பெருமளவுக்கு தரப்படுவதே கிடையாது. ஏன் என்பதையும் சொல்கிறேன். கல்விக்கடன் கேட்டு வருபவர்களுக்கு கடன் எளிதில் கிடைத்தே தீர வேண்டும் என சமீபத்தில் அனைவராலும் பேசப்பட்டு, அரசாங்கமும் இதனை வங்கிகளிடம் பேசி கட்டாயமாக்கி எளிதில் கிடைக்கும்படி சில கெடுபிடிகளையும் தளர்த்தி வழிசெய்தது போன்று பிம்பத்தை உண்டுபண்ணியது.

ஒவ்வொரு மாவட்டத்திலும் வட்டம் வாரியாக மண்டலம் வாரியாக ஒன்றியம் வாரியாக அனைத்து பெருவாரியான வங்கிகளும் கிளைகளை வைத்துள்ளன. இவர்களுக்கென்று ஒரு கணக்கிருக்கும். அந்தந்த பகுதிகளுக்குள் உட்பட்ட பயனாளிகளுக்கு மட்டும் இத்தனை எண்ணிக்கையில் கல்விக்கடன் முதற்கொண்டு இன்னென்ன கடன்கள் தரப்படவேண்டும் என வகுத்து வைத்துக்கொள்வர். வ‌ங்கியாளர்கள் அவர்களுக்கு ஏற்றார்போல் திறம்பட இதனை கையாள்வர். அதாவது கடனும் கொடுக்க வேண்டும், தமக்கும் பாதகம் இருக்கக்கூடாது. பாதகமா? இதுல பாதகம் எங்கே இருக்குனு தான கேக்குறீங்க. சொல்றேன்.

அதாவது, கடன் வாங்குற‌வங்களுக்கு வேறு எதாச்சும் அரசு மூலமா கல்வி உதவித்தொகை வருதா? என்று பார்ப்பார்கள். (இன்னிக்கு 20000 ரூவாய் தமிழக அரசாங்கம் பொறியியல் படிப்புக்கு அரசாங்க ஒதுக்கீட்டுல சேருற முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்களுக்குனு கொடுக்குது. தேவப்படுற மிச்ச சொச்ச பணத்த கடன்ல கொடுத்துட்டா அதுவும் கணக்குல வந்துடும்னு இவுங்கள மாதிரி மாணவர்களுக்கும் எளிதா கடன் ஏற்பாடு செஞ்சு கொடுத்துருவாய்ங்க). மொத்தக்கடன் தொகையும் கம்மியா இருக்கும், எளிதா திருப்பி வாங்கிடலாம்ல. அதான்.

அப்றம் சொத்துப்பத்து பத்திரத்த வச்சுருந்தா அத பிணையமா வச்சு கொடுக்குறாய்ங்க. மாணவரோட அப்பா அம்மா பாதுகாப்பாளர்னு யாராச்சும் அரசு வேலைல இருந்தா உடனே கொடுத்துருவாங்க. மந்திரி அமைச்சர்னு யாரோட சிபாரிசு இருந்தா சிகப்பு கம்பளி வரவேற்பு தான். கூப்புட்டு கொடுப்பாய்ங்கள்.

ஆக இப்டி வங்கிக்காரனுக்கு எதுல அவனுக்கான பணம் திரும்ப வரதுக்கான 'ரிஸ்க் ஃபேக்டர்' குறைவோ அதுல கடனக்கொடுத்துட்டு கணக்கும் காமிச்சுருவான்.

இது எல்லாத்தையும் தாண்டி போராடிதான் இல்லாதவனுக்குலாம் இன்னிக்கு கல்விக்கடன்லாம் கிடைக்குது. வங்கிக்காரனையும் முழுசா குத்தம் சொல்லிட முடியாது. பெரும்பாலும் கல்விக்கடன்கள் எல்லாம் இன்னிக்கு வாராக்கடன்களா தான் இருக்காம். இத மையமா வச்சுத்தான் தற்போதைய நடுவணரசு ரிலையன்ஸ் போன்ற குண்டர்களை வீதியில் இறக்கி இல்லாதவங்களோட நிம்மதியையும் சேர்த்து கடன வசூலிக்கிறேன்ங்ற பேர்ல அராஜகம் செய்து கொண்டிருக்கிறது. அது வேற ட்ராக்கு கதை.

மேல சொன்ன கல்விக்கடன் எல்லாம் தொழிற்கல்வி படிக்குற கூட்டத்துக்கே முக்காவாசிக்கு மேல சரியாயிடும். அதுக்கப்புறம் ஆசிரியர் பயிற்சிக்கல்விக்கான கடன்கள் இருக்கும். இதெல்லாம் முடிஞ்சு வந்ததுக்கப்புறம் தான் கலை மற்றும் அறிவியல் படிப்புக்கான கல்விக்கடன் கேட்டு விண்ணப்பம் வந்துருக்கானே பாப்பாங்க. ஏன் என்ன காரணம்னு நீங்க தேட பாத்தாலும் முக்கியமான ஒரு காரணம் என்னன்னா தமிழ்நாட்டுல இருக்குற அனைத்து அரசுக்கல்லூரிகள் எல்லாத்துலையும் தற்போது இலவசமாகத்தான் படிப்பு வழங்கப்படுகிறது.

தனியார் கல்லூரியில், அதிலும் கலைக்கல்லூரியில் ஒரு பி.காம். படிப்பிற்கா ஒரு லட்சம் வரை செல்வாகும் ?

உண்மையில் எவ்வளவு வசூலித்தாலும் அதற்கென்று கட்டி செலவழிக்க ஒருத்தனிக்கூட்டமே இருக்கிறது. கேட்காட்டாலும் கொடுத்து சீட் வாங்கிவிடுவார்கள் அவர்கள். அது ஒருபுறமிருந்தாலும் இந்த பி.காம் படிப்பின் தேவைக்கான கிராக்கி அதிகரித்துள்ளது தான் காரணம். படித்ததும் ஏதோ ஒரு ஆடிட்டரிடம் உதவிக்கென்று சேர்ந்துக்கொண்டு நன்கு பழகியபின் தனியாக ஒரு ஆடிட்டராக வலம் வரலாம். மேலும் வங்கி வேலை வாய்ப்புகளில் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு இது பெரிதும் பயனளிக்கும். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த பி.காம் படிப்பு அரசு கல்லூரிகளில் போதிய பேராசிரியர்கள் பணியமர்த்தப்பட்டு இல்லாததன் பொருட்டு இங்கு (அரசுக்கல்லூரிகளில்) தரமிழந்த ஒன்றாகவே இருக்கின்றது. இதனை தனியார் கல்லூரிகள் காசாக்கிக் கொள்கின்றன.

மதிப்பெண் வைத்து இடம் கொடுப்பதைவிட கையில் எவ்வளவு மதிப்பு பணம் வைத்திருக்கிறோம் என்பதை பார்த்தே கல்லூரியில் இடம் தருகிறார்கள். அரசு நிலையங்களிடமிருந்தே நியாயம் எதிர்பார்க்கமுடியாத நிலையில் நாம் இருக்கும் பொழுது தனியார் கல்வி நிறுவனங்களிடம் நாம் எதிர்பார்ப்பதென்பது நம் முட்டாள்த்தனமாகி போய் பல ஆண்டுகள் ஆகிவிட்டன. கல்விதான் வர்த்தகமாகிவிட்டதே.

இவ்வளவுதான் வசூலிக்க வேண்டும் என்று அரசாங்கமும் விதி, நிதி விதித்து கிடுக்கிப்புடி சோதனையில் இறங்கியதாகவும் தெரியவில்லை. இப்படி இருக்கையில் பணந்திண்ணும் முதலைகள் பெருகத்தானே செய்வார்கள். எஸ்.ஐ.டி காலேஜ்‍ல கட்டணம் அதிகம் தான். முறையான கல்விக்கட்டணங்கள் விதிக்கப்படாததன் காரணத்தினால் தான் இவர்கள் ஆட்டம் போடுகிறார்கள்.

எத்தனைக் கல்லூரிகளிலும் சேர்க்கைக்காக விண்ணப்பிக்கும் போது நாம் கட்டும் தொகைப்பணத்தை (250ரூவா முதல் 500ரூ வரையிலான) வாங்கும் போதே சொல்லிவிடுவார்கள், இந்தப்பணம் திரும்பத்தரப்படமாட்டாது என்று. அதற்கு மேல் வாங்கினாலும் பில் தரமாட்டார்கள். இவை யாவும் தான் முறைப்படுத்தப்பட வேண்டும்.

உரிய அரசு அதிகாரிகள் இதிலெல்லாம் தலையிட்டு அவர்களுக்கான பணியை துணிந்து செய்வார்களேயானால் கொஞ்சமாவது உருப்படும். அது கனவிலும் கூட நம் நாட்டில் நடக்காது என்பதும் தெரியும். எல்லாம் தலைவிதி என்று கையை விரித்துவிட்டு கிடைத்ததை வைத்து இன்பம் அடைந்து கொள்ள வேண்டியது தான்.

வேறு என்ன செய்ய?

ஏதோ எனக்கு பட்டத சொல்லிருக்கேன். உண்மையிலேயே இந்த மாதிரியான இடங்கள்ல அவசியமானவங்க யாருக்காச்சும் உதவ முடியும்னா அவுங்க யாருனே தெரியாட்டாலும், வழி காமிச்சு வைங்க. அவுங்க வாழ்க்கையில உங்கள எப்பவும் மறக்கமாட்டாங்க.

ஏன் சொல்றேனா, நானும் ஒருத்தர மறக்கமாட்டேன். எனக்கு வங்கியில கல்விக்கடன் கிடைக்க என் ரத்தம் சம்பந்தமில்லாத ஒருத்தர் எனக்காக‌ பேசினார். அவரொன்னும் பெரிய அமைச்சரோ பண்ணையாரோ இல்லைங்க. சாதாரண கூலி வேலை செய்யுறவருதான், மறக்கமாட்டேன்.

கல்வி நிலையங்கள்ல மனிதம் போதிக்கப்பட்டிருந்த காலமெல்லாம் மலையேறிடுச்சு. மனிதம், கல்வி நிலையங்களை விட்டு சாலைக்கு வந்து பலகாலம் ஆயிடுச்சுங்க. திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்கமுடியாதுனு சொல்லுறபடி ஒரு சில தனியார் கல்வி நிலையங்களாவது முன்வந்து நியாயத்தோடு செயல்பட்டா எப்டி இருக்கும். (படத்துல காமிக்கிற மாதிரி) நல்லாத்தான் இருக்கும்.

கல்விக்கடன் கொடுக்குறேன் பேர்ல, வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தித்தராம, இளைஞர்கள் வாழ்க்கையில நல்லா கண்ணாமூச்சி ஆடுட்டு இருக்காங்க‌. கண்டிப்பாக ஒருநாள், உயர்கல்வி படிப்புகளனைத்தும் இலவசமாக்கப்பட வேண்டும்.

செய்யவிடுவாரா பிக்பாஸ்.?!



பொறுத்திருந்து பாருங்க.
நன்றி வணக்கம் .

வீரமும் சோரமும் இதுகாறும் ஓர் மாய‌பிம்பமாய் - BIGG BOSS, JULIE

அரையும் குறையுமாக வீடியோ ஒன்றை பார்த்துவிட்டு தெளிவில்லாமல் ஆராய்ந்து பார்க்காமல் ஒரு பெண்ணின் பேச்சை நடத்தையை கேளிப்பேச்சாகவோ நையாண்டியாகவோ பேசி சிரித்து பிதற்றுவது கீழினும் கீழான செயல் எனக் கொள்க. வார்த்தைகளை பிடித்துத் தொங்குபவர்கள் அதன் மூலத்தை அறிய முற்பட்டால் உண்மை விளங்கும். 

நான் உண்மையில் இதனை இங்கு கூற விரும்பவில்லை. இருந்தாலும் சில அறிவிலிகளால் ஏற்படுத்தப்படுகின்ற பிம்பமானது மறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டிய ஒன்று என்பதை சொல்லவே இதனை எழுதி வைக்கிறேன். 

Bigg Boss என்ற நிகழ்ச்சியின் பின்புலம் என்ன ஏது அதுவெல்லாம் வேறு கதை. சமீபத்தில் வெளியான நாள் 1க்கான காட்சிகளில் ஜுலி என்ற பெண்ணின் பேச்சை வைத்து பற்பல மீம்களும் வசைகளுமாய் வந்த வண்ணமாக இருக்கிறது. பொதுவில் ஏனோதானோ என்று வீடியோவை பார்த்தால் அப்படித்தான் தோன்றியிருக்கும். நன்கு கவனித்திருந்தால் அதன் உண்மைத்தன்மை விளங்கியிருக்கும். 

ஜுலி (எ) ஜூலியானா அனைவருக்கும் பரிச்சயப்பட்ட, சல்லிக்கட்டு மெரினா போராட்டத்தில் இளம்பெண்ணாக நின்று எந்தவொரு பயமுமின்றி தனக்கென உரித்தான பாணியில் தைரியமாக ஆளும் வர்க்கத்தின் பெயரைச்சொல்லி எதிர்க்குரல் கொடுத்து சமூக வலைதளத்தில் ஊடகங்களில் நம் அனைவரின் கவனத்தை ஈர்த்தார். வீரத்தமிழச்சி என்று கூட சிலர் விமர்சனத்தோடு அழைத்தார்கள். அதன்பின் அவருக்கு பின்னால் கட்டமைக்கப்பட்ட பிம்பங்களோ அது வேறு வேறு. 

இவரை 5 மாதங்கள் கழித்து இன்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் "இவர் இயல்பான பேச்சே இப்படித்தானா? இல்லை, பேசிப்பேசி பயிற்சியின் விளைவாக தான் இப்படி பேசுகிறாரா என்பதை போக போக பார்க்கலாம்" என்று கமல்ஹாசன் 15 பேர்களில் ஒருவராக அறிமுகம் செய்கிறார். 

இரண்டு நாட்கள் நிகழ்ச்சியினை பார்க்கையில் நன்றாகவே ஒன்று விளங்குகின்றது. அதாவது ஜுலி, அனைத்து செயல்களிலும் தன்னை தன்முனைப்போடு ஈடுபடுத்திக்கொண்டு வலிய வலிய பேச்சுகளை ஏற்படுத்தி (அல்லது சாதாரண இவரது பேச்சு அங்குள்ளவர்களுக்கு வித்தியாசமாக பட்டு , மற்றவர்களின் எதிர்பேச்சால் இவரது பேச்சு சற்று நீள்கிறது எனவும் கொள்ளலாம் என) தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்கிறார். துடிப்புடனே இருக்கிறார். 

பல வேளைகளில் அவர் செய்வது 'over romanticising' போன்று தோன்றலாம். ஆனால் புதிய இடத்தில் புதிய ஆட்களோடு பழகுகையில் ஜுலி போன்ற துடிப்பானவர்கள் எதைச்செய்தாலும் கூடுதல் மெனக்கெடுக்கவே செய்வார்கள். அது அப்படித்தெரிவது யதார்த்தம். 

இது போல பல காட்சிகள் "அண்ணே சோறு சோறு.. அக்கா சோறு சோறு... சார் சோறு சோறு.... " , " சாப்பாடு வரப்போகுது.. கதவைத்திறந்து பார்த்ததும் பொருட்கள் இருப்பதைக்கண்டு தன் இரு கைகளையும் விரித்து "சாப்பாடு வந்துருச்சு" என கத்தும் பொழுதும் அதை பார்க்கும் சிலருக்கு கடுப்பாகத்தானிருக்கும். ஆனால் அவர் அவராகவே இருக்கிறார். அதுவே உண்மை. 

ஷ்ரீ - ஆரம்பத்திலிருந்தே குழம்பிய குட்டைக்குள் இருக்கும் மனதை வைத்து சுற்றி புலம்பியப்படி இருக்கிறார். பிக் பாஸிடம் தான் வெளியே பேசவேண்டும் என வேண்டுகோள் வைக்கிறார். மறுவினையாக ஒன்றுமில்லை. சகாக்களான சக்திவேல் வாசு, கஞ்சா கருப்பு போன்றவர்களிடமும் புலம்புகிறான். மறுமொழியாக அவர்கள் அவனுக்கு ஆறுதல் கூறி, தைரியத்துடன் இருக்க அறிவுரை கூறுகின்றனர்.

அடுத்து ஜுலியிடமும் புலம்பியிருக்கிறார் நம் ஷ்ரீ. அதற்கு அவர் ஆறுதல் கூறிய வார்த்தைகளும் பேச்சும் தான் இன்றைக்கு 'வீரத்தமிழச்சியின் விரகதாபம்', 'கட்டிப்பிடிக்க ஆளில்லை சொல்கிறார் வீரத்தமிழச்சி' என ஊளை இணைய ஊடகங்கள் சிலவும் முகநூல் நண்பர்கள் பலரும் மேலோட்டமாய் பார்த்துவிட்டு சொற்களை பிடித்துருவி சுய இன்பம் கொள்கின்றனர். 

மீண்டும் அந்த காணொளியைப் பார்த்தால் உண்மை விளங்கும். ஜுலி கூறுவாள் " பாதியிலேயே விட்டுட்டு போக நினைக்காத. நான் வர்றப்போ வீட்டுக்குள்ள ஒருத்தரு ஒருத்தரு கட்டிப்பிடிச்சுட்டு இருந்தாங்க. எனக்குனு யாருமில்ல. என் நிலமையும் யோசித்து பாரு. பாதியில விட்டுட்டு போகணும்னு தயவு செஞ்சு நினைக்காத" னு. 

அவ்வளவு தான் அவள் சொல்லியிருப்பாள். அதற்குள் ஈறும் பேனும் வைத்து ச்சை..

அவளது பேச்சு உண்மையில் எதனை ஒத்திருந்தது? எனக்கென்று தனியே பேச்சுத்துணைக்கு கூட யாருமில்லாமல் நானே இருக்கிறேன். எனக்கு accompany கொடுக்கவாவது நீ இருக்கலாம். அதைவிட்டு நிகழ்ச்சியின் பாதியிலேயே போகவேண்டுமென நினைப்பது முட்டாள்தனம் என ஒரு நண்பனுக்கு ஆறுதல் கூறும் தொனிதான் அவளுடையது. 

ஒருவேளை அப்படியே அவள் ஒருவனை விரும்பி எதைக்கேட்டிருந்தாலும் அது அவளது உரிமை. அன்றைக்கு பலன் எதிர்பார்த்தோ இல்லாமலோ சல்லிக்கட்டுக்காக குரல் கொடுத்தாள். அன்றைக்கு ஆகச்சிறந்தவள் இவளென தலையில் தூக்கிவைத்து ஆடுனீர்கள். அதே ஆட்கள், இன்றைக்கு தரையில்போட்டு தூற்றுகிறீர்கள். உங்களை போன்றதொரு கேவலமான பிறவிகளிடம் தான் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

விஜய் டிவிக்காரனும் டிஆர்பி ஏத்த இதைப்போட்டிருக்கிறான் என்று சொன்னாலும், நான் கண்ட காட்சிதானே அனைவரும் கண்டது, நான் கண்ட காட்சியில் அப்படியொன்றும் அசிங்கம் இருந்ததாய் தெரியவில்லை. தவறு அவர்களிடம் இல்லவே இல்லை. மேலோட்டமாக பார்க்கும் கண்களில் , ஆராய்ந்து பார்க்காது குற்றம் விளிக்கும் நாவில் இருக்கிறது. 

இதுவெல்லாம் ஒரு விசயமென்று எழுதி வக்காலத்து வேறா என்று சிலர் எண்ணக்கூடும். பொய்யான ஒன்றை மெய்யாக்கி தூற்றுவதற்கென ஒருபுறம் கூட்டம் இருக்கையில், அது மெய்யல்ல பொய்யென்று கூறும் தனியனாக நான் இருந்துவிட்டுப்போகின்றேன்.

சாமிகளா, நான் பெண்ணியவாதி எல்லாம் ஒன்று கிடையாது. அதோடு அவரைச்சுற்றி நான் ஒரு புனிதபிம்பத்தை ஏற்படுத்தவும் நினைக்கவில்லை. ஆனால் ஒரு பெண்ணின் மீது போலியான குற்றச்சாட்டு சுமத்தப்படும் பொழுது மூடிக்கொண்டு செல்பவனும் நானல்ல என்பதைக்கூறிக் கொண்டு விடை பெறுகிறேன். 

நன்றி, வணக்கம். 

(Video Link : https://m.facebook.com/story.php?story_fbid=1814313598598108&id=1629018170460986

இது ஜுலியை விமர்சித்து போடப்பட்ட வீடியோ.)


#ஜூலி #BIGGBOSS

மரகத நாணயம்

என்னிடம் முன்பே படம் பார்த்த சில நண்பர்கள் "இதெல்லாம் ஒரு படமா? மொக்கை" என்று பொத்தாம் பொதுவாக‌ சொன்னார்கள். நானும் படம் பார்த்தேன். என்னை பொறுத்த அளவில் இயக்குனர் கதைக்கேற்ப திறம்படவே நகர்த்தியிருக்கிறார் என்றே நான் சொல்வேன். நான் கண்டு ரசித்த படமாகத்தான் இருந்தது. அனைவரும் ரசித்தனர். முழுக்க முழுக்க நகைச்சுவைகளுடன் கூடிய சுவாரஸ்யங்கள் நிறைந்த‌ கற்பனையான திகில் படம். படத்தின் ஓட்டத்திலேயே சில 'மெசேஜ்'களும் சொல்லாமல் சொல்லப்படுகின்றது.

பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இரும்பொறையன் என்னும் பல்லவ மன்னன் வாழ்ந்து வந்ததாகவும் அவருக்கு மரகத நாணயம் என்றால் அவ்வளவு இஷ்டம் என்றும் அதனால் அவன் பெற்ற வெற்றிகளை பற்றியும் படத்தின் அறிமுகத்தில் சொல்கிறார்கள். அவரின் வயோதிக பிராயத்திலும் படுத்த படுக்கையிலும் மரகத நாணயத்தை கையைவிட்டு நீக்காது அவர் கையிலேயே வைத்திருப்பார். அதன்மீது கொண்ட தீராத காதலினால், தான் இறந்தபின்னும் தன்னுடைய கல்லறையில் அதனையும் சேர்த்தே புதைக்கச் செய்கிறார். அதற்கும் காவலும் இருக்கிறார். மீறி அதனைத் தொடுபவர்களை காவும் வாங்குகிறார், இறந்துபோன மன்னன் இரும்பொறையன். இப்படியாக பல நூறு ஆண்டுகள் கழித்து, இன்றைக்கு அதன் நிலை என்ன? அது யாரிடம் இருக்கின்றது? இரும்பொறை மன்னன் இன்னும் காவலுக்கு இருக்கிறாரா? என்று பல கேள்விகளுக்கு விடை கிடைக்கின்றன படத்தின் இறுதியில்.

மரகத நாணயம் வேண்டி அதனை அபகரிக்க நினைக்கும் 132 பேர் இரும்பொறை மன்னனால் கொல்லப்படுகின்றனர். இதற்காக விலை பேசி வெளிநாட்டிலிருந்தும் பலர் படையெடுக்கின்றனர். இந்த நிலையில் ஸ்மக்ளிங் செய்து சம்பாதித்துக் கொண்டிருந்த கதாநாயகனும் அவன் தோழனும் மரகத நாணயத்தைப் பற்றி அறிய வருகின்றனர். பணத்திற்காக கதாநாயகனும் அவன் தோழனும் இணைந்து ஆவிகளினால் எழுப்பப்பட்டவர்களைக் கொண்டு, மாண்டுபோன 132 பேர்களின் ஆவிகளை வைத்து மரகத நாணயத்தை ஒரு வழியாக எடுத்துவிடுகின்றனர். அவர்களையும் இரும்பொறை மன்னன் துரத்துகிறான். ஒரு கட்டத்தில் மன்னன் வெல்கிறான். இவர்களின் உயிர்களும் காப்பாற்றப்படுகின்றன.

படம் முழுக்கவே நகைச்சுவைக்கு பஞ்சமிருக்காது. ஆவி ஏறிய பூதவுடல்கள் செய்கின்ற செயல்களனைத்துமே நம்மை வயிறு வலிக்க சிரிக்கச்செய்துவிடும் என்பதில் துளியும் ஐயமில்லை. கதாநாயகனின் தோழனாக வலம் வருபவரும் தன் நடிப்பில் அள்ளிக்கொண்டிருக்கிறார். வில்லன் கதாபாத்திரத்தில் ஆன்ந்த்ராஜ் 'ட்விங்கிள் ராமநாதன்' என்ற பெயரில் வலம் வருகிறார். ஆவிகளினால் எழுப்பப்பட்டவர்கள் வழியாக படத்தின் இயக்குநர் பார்வையாளர்களிடம் சில கருத்துகளை முன் வைக்கிறார்.

எழுப்பப்பட்டவர்களின் வேலை முடிந்துவிட்டபடியால் கதாநாயகன் மற்றும் அவன் தோழனிடமிருந்து விடைபெறுகையில் ஆவிகள் பேசும் பேச்சுகள் என் நெஞ்சைத் தொட்டது... அவ்வகையில் ஒரு மூத்த வயதான தமிழ் பெரியவரின் ஆவி பேச்சு அமைந்தது. தன் மக்கள் வாழணும், தன் மொழி வாழணும், தன் நாடு செழிக்கணும்னு வாழ்க என்மக்கள், வாழ்க தமிழ்னு சொல்லியபடி, தான் புகுந்திருந்த செத்த உடலவிட்டு விலகி போவாரு பாருங்க. நம்ம கண்ணுக்கு அதே காலகட்டத்துல வாழ்ந்து போய் சேர்ந்த நம்ம முன்னோர்களும் அவுங்க நமக்காக செய்து முன்னமே வைத்த பல நல்லவைகளும், விட்டுச்சென்ற இயற்கை வளங்களும் நம் கண்முன் வந்துபோகும். நல்லா இருங்கடா, என் மக்கா, நீங்க எல்லாரும் நல்லா இருக்கணும்னு இன்னொரு ஆவி சொல்லியபடி போய்சேர்ந்துவிடும்.

கதையின் உயிர்ப்பு கருதி காதல் மற்றும் கதாநாயகனின் காதலியை பற்றி இங்கு சொல்லவில்லை. பெண் ஒருவள் தன் காதலைக்கூட சொல்லமுடியாமல் வேறு ஒருவனை திருமணம் செய்து கொள்கிறாள். கணவனுடைய கொடுமையினால் மாண்டும் போகின்றாள். அப்படி இறந்து போனவள் ஒருநாள் வேறொரு வடிவங்கொண்டு மீண்டு வருகிறாள். கணவன் அப்போதும் அவளை அடிக்கிறான். இங்கு இயக்குநர், பெண்ணியத்தின் மீதான தாக்குதலை உணர்த்த வேண்டி ஆணாதிக்கம் கொண்ட சமூகத்தினை அறைவது போன்று ஒரு காட்சியை அமைக்கிறார்.

காட்சிகளனைத்துமே நகைச்சுவை உணர்வையும் சேர்த்தே தரும்படி படமாக்கப்பட்டிருப்பது ஒன்றுதான் இந்த‌ படத்தின் வெற்றியாக இருக்கமுடியும்.

படம் முடிந்து வெளியில் வருகையில் உங்களோடு சற்று தூரம் இரும்பொறை மன்னனும் கூடவே வருவான். வந்தான்.

20-06-2017

-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-